ஏழாந் திருமொழி
(1808)
தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல்
அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே!
(1809)
மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்றநுண் ணிடைநுடங்கும்,
அன்னமென் னடையினார் கலவியை அருவருத் தஞ்சி னாயேல்,
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க் காகிமுன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
(1810)
பூணுலா மென்முலைப் பாவைமார் பொய்யினை மெய்யி தென்று,
பேணுவார் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்
நீணிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண்ணி ரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
(1811)
பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார் பணைமுலை அணைதும் நாம் என்று,
எண்ணுவார் எண்ணம தொழித்துநீ பிழைத்துய்யக் கருதி னாயேல்,
விண்ணுளார் விண்ணின்மீ தியன்ற வேங்கடத்துளார் வளங்கொள்
முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
(1812)
மஞ்சுதோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ துயரெனக் கருதி னாயேல்
நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் வைத்தவள் நாளை யுண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
(1813)
உருவினார் பிறவிசேர் ஊன்பொதி நரம்புதோல் குரம்பை யுள்புக்கு
அருவிநோய் செய்துநின் றைவர்தாம் வாழ்வதற் கஞ்சி னாயேல்
திருவினார் வேதநான் கைந்துதீ வேள்வியோ டங்க மாறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
(1814)
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்,
தீயலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல்வா னாகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
(1815)
மஞ்சுசேர் வானெரி நீர்நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக் கையை அரணமன் றென்றுய்யக் கருதி னாயேல்,
சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
(1816)
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்றிவர் ஓது கின்ற
கள்ளநூல் தன்னையும் கருமமன் றென்றுய்யக் கருதி னாயேல்,
தெள்ளியார் கைதொழும் தேவனார் மாமுநீர் அமுது தந்த,
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
(1817)
மறைவலார் குறைவிலார் உறையுமூர் வல்லவாழடிகள் தம்மை,
சிறைகுலா வண்டறை சோலைசூழ் கோலநீள் ஆலி நாடன்
கறையுலா வேல்வல்ல கலியன்வாய் ஒலியிவை கற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல்பூண் டின்பநன் கெய்து வாரே.