இரண்டாந் திருமொழி
(128)
அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே
இரவுமுண்ணாது உறங்கிநீபோய் இன்றுமுச்சி கொண்டதாலோ
வரவும்காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய
திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே.
(129)
வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்நீ பிறந்தபின்னை
எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே
முத்தனைய முறுவல்செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே.
(130)
தந்தம்மக்கள் அழுதுசென்றால் தாய்மாராவார் தரிக்ககில்லார்
வந்துநன்மேல் பூசல்செய்ய வாழவல்ல வாசுதேவா
உந்தையார்உந் திறத்தரல்லர் உன்னைநானொன் றுரப்பமாட்டேன்
நந்தகோப னணிசிறுவா நான்சுரந்த முலையுணாயே.
(131)
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச்சகடு கலக்கழிய
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்தபோது நொந்திடுமென்று
அஞ்சினேன்காண் அமரர்கோவே ஆயர்கூட்டத் தளவன்றாலோ
கஞ்சனைஉன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே.
(132)
தீயபுந்திக் கஞ்சன்உன்மேல் சினமுடையன் சோர்வுபார்த்து
மாயந்தன்னால் வலைப்படுக் கில்வாழகில்லேன் வாசுதேவா
தாயர்வாய்ச்சொல் தருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன் போகவேண்டா
ஆயர்பாடிக் கணிவிளக்கே அமர்ந்துவந்துஎன் முலையுணாயே.
(133)
மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு
இன்னிசைக் கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக்கண்டார்
என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள்
என்னும்வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலையுணாயே.
(134)
பெண்டிர்வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுதுமென்னு மாசையாலே
கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்கநோக்கி
வண்டுலாம்பூங் குழலினார்உன் வாயமுதம் உண்ணவேண்டி
கொண்டுபோவான் வந்துநின்றார் கோவிந்தாநீ முலையுணாயே.
(135)
இருமலைபோ லெதிர்ந்தமல்லர் இருவரங்கம் எரிசெய்தாய்உன்
திருமலிந்து திகழ்மார்வு தேக்கவந்துஎன் னல்குலேறி
ஒருமுலையை வாய்மடுத்து ஒருமுலையை நெருடிக்கொண்டு
இருமுலையும் முறைமுறையா ஏங்கிஏங்கி இருந்துணாயே.
(136)
அங்கமலப் போதகத்தில் அணிகொள்முத்தம் சிந்தினாற்போல்
செங்கமல முகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம் முற்றத்தூடே
அங்கமெல்லாம் புழுதியாக அளையவேண்டா அம்மவிம்ம
அங்கமரர்க் கமுதளித்த அமரர்கோவே முலையுணாயே.
(137)
ஓடவோடக் கிங்கிணிகள் ஒலிக்குமோசைப் பாணியாலே
பாடிப்பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன்
ஆடியாடி யசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தையாடி
ஓடியோடிப் போய்விடாதே உத்தமாநீ முலையுணாயே.
(138)
வாரணிந்த கொங்கையாய்ச்சி மாதவாஉண் ணென்றமாற்றம்
நீரணிந்த குவளைவாசம் நிகழநாறும் வில்லிபுத்தூர்
பாரணிந்த தொல்புகழான் பட்டர்பிரான் பாடல்வல்லார்
சீரணிந்த செங்கண்மால்மேல் சென்றசிந்தை பெறுவார்தாமே.