(2096)

முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்

முதலாவான் மூரிநீர் வண்ணன், - முதலாய

நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,

பல்லார் அருளும் பழுது.

 

பதவுரை

(உலகத்தில் பலபல தெய்வங்கள் வழங்கப்பட்டாலும்)

மூவரே

-

ஸ்ருஷ்டிஸ்திதி  (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே

முதல் ஆவார்

-

முக்கியரான தேவர்களாவார்;

அம்மூவர் உள்ளும்

-

அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே

மூரி நீர் வண்ணன்

-

கடல் வண்ணனாகிய திருமாலே

முதல் ஆவான்

-

தலைவனாயிருப்பவன்;

முதல் ஆய

-

உலகுக்கெல்லாம் காரண பூதனும்

நல்லான்

-

நற்குணங்களமைந்தவனுமான அப்பெருமானுடைய

அருள் அல்லால்

-

கிருபையானது நன்மையை விளைக்குமேயொழிய

நாமம்நீர் வையகத்து

-

கடல்சூழ்ந்த இப்பூமியில்

பல்லார்

-

அத்திருமால் தவிர மற்றும் பலருடைய

அருளும்

-

தயையும்

பழுது

-

பயனற்றதாம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [முதலாவார்.] கீழ்ப்பட்டில் “உலகளந்தமூர்த்தியுருவேமுதல்” என்றருளிச்செய்த ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘கீழ்ப்பட்ட தெய்வங்களென்று உம்மால் கூறப்படுகின்ற தெய்வங்களும் தம்மைத் தொழுகின்றவகளுக்குப் பலன்களையளிக்கக்காண்கிறோமே; அவர்களது அருளைப் பலரும் பெற்று வாழ்கின்றனரன்றோ என்றுகூற, அவர்களுக்கு விடையளிக்கிறாரிப்பாட்டில். தெய்வம் தெய்வமென்று நாட்டிலே பலர் வழங்கப்படினும், படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற மூன்று தொழில்களுக்கும் கர்த்தாக்களாக ஏற்பட்ட ப்ரஹ்மா விஷ்ணு ருத்ரன் என்ற மூவருமே முதன்மைபெற்ற தேவர்களாவார்; அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே கடல் வண்ணனாகிய ஸ்ரீமந்நாராயணனே தலைமை பெற்றிருப்பவன். ஸகல ஜகத்காரண பூதனாய் எல்லாரிடத்திலும் வாத்ஸல்யம் நிறைந்தவனான அந்தத் திருமாலின் திருவருள் நன்மையைத் தருமேயொழிய வேறு எந்த தெய்வத்தினருளும் சாச்வதமான நன்மையை நல்கமாட்டாது; அவ்வருளைபெற நினைப்பது வீணேயாகும் என்றாராயிற்று. க்ஷூத்ர தெய்வங்களின் அருள் க்ஷூத்ர பலன்களுக்கே காரணமாவதனாலும் பரமபுருஷனுடைய பேரருள் ஒப்புயர்வற்ற அழிவில்லாத பேரின்பத்தைப் பெறுவிக்கக் காரணமாவதனாலும் ‘முதலாய நல்லானருளே நன்று, பல்லாரருளும் பழுது’ என்னத்தட்டில்லையென்க.

 

English Translation

The foremost among all gods are the Tirumurti, and the Ocean-hued one is the foremost among the Trimurti. Were if not the grace of the benevolent first-lord, the grace of all the gods-in-names in the world are naught but waste.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain